சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்தி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், ஜனசக்தி அறக்கட்டளையானது ஜனாதிபதி நிதியத்துடன் இணைந்து 'நாளை வடிவமைக்க இன்று பாதுகாப்போம்' என்ற தேசிய செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன் கீழ், சிறுவர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியம் வழங்கும் அதே அளவிலான அல்லது எஞ்சியிருக்கும் நிலுவைத் தொகையில் எது குறைவோ, அதனை ஜனசக்தி அறக்கட்டளை மேலதிகமாக வழங்கும். இனம், மதம், மொழி, சாதி அல்லது பிராந்தியம் என எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்துச் சிறுவர்களுக்கும் சமமான மருத்துவ உதவிகள் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நோயாளிக்குக் கிடைக்கும் மொத்த நிதியுதவி இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த உடன்படிக்கை 2026 மே 15 முதல் ஜனாதிபதி நிதியத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்குப் பொருந்தும்.